பிரண்டையின் மருத்துவ பயன்கள்
- Varmakalai Aasan P.Blesswin
- Mar 26, 2021
- 4 min read
இந்தியா மற்றும் இலங்கையில் பிரண்டை அதிகமாகக் காணப்படுகிறது. மருத்துவ குணமுடையது. பொதுவாக, மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது.
பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை என பல வகைப்படும். இதற்கு, `வஜ்ஜிரவல்லி’ என்ற பெயரும் உண்டு. `Cissus quadrangularis’ என்ற தாவரவியல் பெயர்கொண்ட இது, கொடி வகையைச் சேர்ந்தது.

இதன் சாறு உடலில் பட்டால், அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்தும். இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இதில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரணப் பிரண்டையே அதிகமாகக் கிடைக்கிறது.
அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும். மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.
எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும்.
மனஅழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டிவிடும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும். மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்தத் துவையலைச் சாப்பிடலாம்.
மேலும் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு, இதய வால்வுகள் பாதிப்படையும். இந்த பாதிப்புக்கு உள்ளானோர், அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும்; இதயம் பலப்படும்.
பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து.
எலும்பு முறிவு ஏற்பட்டால், இதன் துவையலைச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம். இளம் தண்டுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்து, நன்றாகக் காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப் போடுவதன் (பாதிக்கப்பட்ட இடத்தில் பூசுவது) மூலம் பலன் கிடைக்கும். எலும்பு முறிவு மட்டுமல்லாமல், அடிபட்ட வீக்கம், சுளுக்கு, வலி உள்ள இடங்களிலும் இதைப் பூசிவர நிவாரணம் கிடைக்கும்.
வாயு பிடிப்பு, கைகால் குடைச்சலுக்கான மருந்து

தேவையான பொருட்கள்:
பிரண்டை துண்டுகள், உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு, புளி, இஞ்சி, நல்லெண்ணெய்.
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்தவுடன் உளுந்தம் பருப்பு சேர்க்கவும். பூண்டு, வரமிளகாய், இஞ்சி துண்டு, சிறிது புளி சேர்த்து வதக்கவும். புளி தண்ணியில் ஊறவைத்த பிரண்டை துண்டுகளை போடவும். நன்றாக வதக்கவும்.
ஆறவைத்து சட்னி போன்று அறைத்து தாளிக்கவும். இது வாயு பிடிப்பை குணமாக்குவதுடன், கைகால் குடைச்சலை சரிசெய்கிறது. பிரண்டையானது உள் உறுப்புகள், எலும்புகளை பலப்படுத்துகிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை நிலைநிறுத்துகிறது.

பிரண்டை உப்பு :-
பிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டி நான்கு நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் வெய்யிலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும்.
பேதி, வாந்தி -:
குழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தை வாந்தி பேதி குணமாகும். செரியாமை குணமடையும். பெரியவர்களுக்கு 2 -3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கொடுக்கவும்.
வாய்ப்புண் :-
வாய் புண், வாய் நாற்றம், உதடு, நா வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெயில் இரு வேளை மூன்று நாள் கொடுக்க குணமாகும்.
வயிற்றுப்புண் :-
தீராத வயிற்றுப்புண், குன்மக்கட்டி, வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 – 96 நாள் இரு வேளை சாப்பிட குணமாகும்.
மூலம் :-
நவ மூலமும், சீழ்ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு வெண்ணெயில் 24 -48 நாள் இரு வேளை கொடுக்க குணமாகும்.
பிரண்டை பற்பம் :-
300 கிராம் பிரண்டை100 கிராம் உப்புடன் ஆட்டி அடைதட்டிமண் குடுவையில் வைத்துச் சீலைமண் செய்து புடம் போட்டு எடுக்க சாம்பல் பற்பமாக மாறி இருக்கும் உப்பைப் போலவே எல்லா நோய்களுக்கும் இந்த பஸ்பத்தைக் கொடுக்கலாம்.
உடல் பருமன் :-
பிரண்டை உப்பில் 2 முதல் 3 கிராம் எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்துச் சாப்பிட 2 மாதத்தில் உடல்பருமன் குறைந்து, ஊளைச் சதையும் குறையும்.
சூதகவலி :-
மூன்று வேளை 2 கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும்.
தாதுநட்டம் :-
பிரண்டை உப்பை 2 கிராம் அளவு, ஜாதிக்காய்த் தூள் 5 கிராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமடையும். வீரியம் பெருகும், உடம்பு வன்மை பெரும்.
செரியாமை :-
பிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி, எடுத்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சம அளவாக எடுத்துக்கொண்டு உள்ளுக்குக் கொடுத்துவர செரியாமை தீரும். இதனை கற்கண்டு கலந்த பாலுடன் உட்கொண்டு வர உடலுக்கு வன்மை தரும்.
பசி உண்டாக :-
1 . நெய்விட்டு பிரண்டைத்தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல் சிறு குடல் பெருகுடல் புண் நீக்கி நல்ல பசிஉண்டாகும்.
2. பிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளி நீரில் ஊற வைத்து வேளைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.
மூல நோய் குணமாக :-
பிரண்டைத் தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப் பாக்களவு வீதம் தினம் இரு வேளையாக 21 நாட்கள் உட் கொண்டு வந்தால் மூல நோயில் உண்டாகும் நமச்சலும், குருதி வடிதலும் நிற்கும்.
காது வலி தீர :-
காதுவலிக்கும், காதில் சீழ்வடிதலுக்கும் பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்து இரண்டு துளி காதில் விட்டு வர குணம் தெரியும். மூக்கில் வடியும் ரத்தம் நிற்க இந்தச் சாற்றை இரண்டு அல்லது மூன்று துளி மூக்கில் விடலாம், இந்தச் சாற்றையே தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வரபெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.
வயிற்று பூச்சி நீங்க :-
பிரண்டை, பேரிலந்தை, வேப்ப ஈர்க்கு, முருங்கன் விதை, ஓமம் இவைகளை சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும்.
முறிந்த எலும்பு விரைவில் சேர :-
முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.
சுளுக்கு தீர:-
பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக்காச்சி, குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும்.
துவையல்

பிரண்டைத் தண்டுகளின் மேல் தோலை அகற்ற்றி, அதில் உள்ள நாரையும் அகற்றிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்க வேண்டும். அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். சுவைக்காக தேங்காய், உளுந்து சேர்த்துக்கொள்ளலாம். பிறகு, கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்த துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
இலைத் துவையல்

பிரண்டையின் இலையிலும் துவையல் செய்யலாம். இதைச் சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூல நோய் போன்றவை குணமாகும். இலை 100 கிராம், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு - 3 பல், மிளகு - 5, காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் மஞ்சள், உப்பு ஆகியவை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும். முதலில் இஞ்சி, பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்றவற்றை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு பிரண்டை இலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டு வதக்கி, ஏற்கெனவே அரைத்து வைத்த கலவையுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்தால் துவையல் தயார்.
வற்றல்
நன்கு முற்றிய இதன் தண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கி, மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊறவைத்து உலர்த்தி வற்றலாக்க வேண்டும். அந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் பசியின்மை, நாக்குச் சுவையின்மை போன்றவை குணமாகும்.
சேவலோன் வர்மக்கலை
+91-9487261280